மார்ச் 3 : முதல் வாசகம்
ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 17: 20-29
மனிதர்களுடைய அநீதியான செயல்கள் ஆண்டவருக்கு மறைவாய் இருப்பதில்லை; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் அறிவார். ஆண்டவர் நல்லவர்; அவர் தம் படைப்புகளை அறிவார். அவற்றை அவர் விட்டுவிடவில்லை, கைவிடவுமில்லை; மாறாகப் பாதுகாத்தார். மனிதர் செய்யும் தருமங்கள் அவருக்குக் கணையாழிபோல் திகழ்கின்றன. அவர்கள் புரியும் அன்புச் செயல்கள் அவருக்குக் கண்மணி போல் விளங்குகின்றன. பின்னர் அவர் எழுந்து அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்; அவர்களுக்குச் சேரவேண்டிய வெகுமதியை அவர்களின் தலைமேல் பொழிவார். இருப்பினும் மனம் வருந்துவோரைத் தம்பால் ஈர்த்துக்கொள்கிறார்; நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்.
ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள்; அவர் திருமுன் வேண்டுங்கள்; குற்றங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். உன்னத இறைவனிடம் திரும்பி வாருங்கள்; அநீதியை விட்டு விலகிச் செல்லுங்கள்; அவர் அருவருப்பதை அடியோடு வெறுத்திடுங்கள். வாழ்வோர் உன்னத இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர். ஆனால் கீழுலகில் அவரது புகழை யாரே பாடுவர்? உயிர் வாழ்ந்திராதவர் போன்றே இறந்தவர்களும் அவருக்கு நன்றி செலுத்துவதில்லை. நலத்துடன் உயிர் வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர்.
ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது!
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment