மார்ச் 11 : நற்செய்தி வாசகம்
கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
-----------------------------------------------------------------------------
“நியமங்கள், முறைமைகளின்படி ஒழுகுங்கள்”
தவக் காலத்தின் மூன்றாம் வாரம் புதன்கிழமை
I இணைச் சட்டம் 4: 1, 5-9
திருப்பாடல் 147: 12-13, 15-16, 19 (12a)
II மத்தேயு 5: 17-19
“நியமங்கள், முறைமைகளின்படி ஒழுகுங்கள்”
கட்டளையைக் கடைப்பிடிப்போர்க்கு ஆசி
கடவுளின் வார்த்தைக்கு அழிவே இல்லை. அத்தகைய கடவுளின் வார்த்தைகளின் படி நடந்தால் எல்லாவிதமான ஆசிகளையும் பெறலாம் என்கிறது இன்றைய இறைவார்த்தை.
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குப் பல கட்டளைகளைத் தந்தாலும், அவர் அவர்களுக்குத் தந்த பத்துக் கட்டளைகள் மிகவும் முக்கியமானவை. இவற்றின்படி நடந்தால் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்குள் நுழைய முடியும். அதைவிடவும் இஸ்ரேயல் மக்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழும்போது, அவர்கள் கடவுளின் மக்கள் என்பதைப் பிறவினத்தார் அறிந்துகொள்வர் என்று மோசே இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடுகின்றார்.
இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 147, யூதா நாட்டினர் பாபிலோனிலிருந்து திரும்பி வந்தபோது, எருசலேம் திருக்கோயிலும் திருநகரும் எதிரிகளால் சிதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, அவற்றை மீண்டுமாகக் கட்டியெழுப்பி, சுற்றிலும் சுற்றுச் சுவர் எழுப்பினர். அதை முன்னிட்டு விழாக் கொண்டாடினர். அப்போது பாடப்பட்டதுதான் இத்திருப்பாடல். மேலும் இது, ஆண்டவருக்கு அஞ்சி, அவரது கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுள் நாட்டிற்குப் பாதுகாப்பையும், அவர்களது பிள்ளைகளுக்கு ஆசியும் வழங்குவார் என்கிறது
இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாலும், அவர்கள் மீண்டும் மீண்டுமாக அவற்றை மீறினார்கள். ஆனால், இயேசு கிறிஸ்து திருச்சட்டத்தின்படியும், இறைவாக்கின்படி நடந்தார். இவ்வாறு அவர் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களைப் போன்று சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இல்லாமல் (மத் 23:3) சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார் (லூக் 24:19).
நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்க வேண்டும். அப்போதுதான் நாம் நற்செய்தியில் இயேசு சொல்வது போல, விண்ணரசில் பெரியவராக இருக்க முடியும்.
பெயருக்குக் கிறிஸ்தவர்கள்!
தன்னுடைய நாட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தபோதும் அவர்களின் வாழ்க்கை எல்லாருக்கும் முன்மாதிரியாய் இருப்பதைப் பார்த்து வியந்து போன ஒரு மன்னர், அவர்களை அழைத்துப் பரிசு கொடுக்க விரும்பினார்
ஒரு குறிப்பிட்ட நாளில் மன்னர், நாட்டில் இருந்த கிறிஸ்தவர்களை ஓர் அரங்கத்தில் கூட்டிச் சேர்த்து, அவர்களுக்குப் பரிசு கொடுக்கத் தொடங்கினார். ஒருவர் மன்னரிடமிருந்து பரிசினைப் பெற முன் வந்தபோது, கூட்டத்திலிருந்து, ‘இவர் கிறிஸ்தவரில்லை’ என்றொரு குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
அதைக்கேட்டு, பரிசு பரிசு பெற வந்த மனிதரிடம் மன்னர், “நீ கிறிஸ்தவர் இல்லையா?” என்று கேட்டபோது, அவர், “நான் கிறிஸ்தவர்தான்” என்று சாதித்தார். உடனே மன்னர் அந்த மனிதரிடம் வேலை செய்யும் வேலையாள், அவரிடமிருந்து கடன்பெற்றவர், அவரது அண்டை வீட்டார் என்று மூவரை அழைத்து, அவரைப் பற்றி விசாரித்தார். வேலையாள், அந்த மனிதர் சரியாகக் கூலி தருவதில்லை என்றும், கடன் பெற்றவர், அவர் அளவுக்கு அதிகமாக வட்டி வசூலிக்கின்றார் என்றும், அண்டை வீட்டார், அவர் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிக்கொண்டிருக்கின்றார் என்றும் சொன்னார்.
இதெல்லாம் கேட்டுச் சீற்றமடைந்த மன்னர் அவரிடம், “நீ பெயருக்குத்தான் கிறிஸ்தவராக இருக்கின்றாயே ஒழிய, பெயர் சொல்லும் கிறிஸ்தவர் இல்லை. உண்மையில் நீ போலியான கிறிஸ்தவன். அதனால் உனக்குப் பரிசு எதுவும் தரப்பட மாட்டாது” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
பெயருக்குக் கிறிஸ்தவராய் வாழ்வதில் என்ன பெருமை இருக்கின்றது? பெயர் சொல்லும்படி வாழ்வதில்தானே கிறிஸ்தவருக்குப் பெருமை இருக்கின்றது! நாம் எத்தகைய கிறிஸ்தவர்களாய் வாழ்கின்றோம்? சிந்திப்போம்!
ஆண்டவரின் வார்த்தை
“இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்” (யாக் 2: 10)
தீர்மானங்கள்
1) நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் கடவுளுக்குப் பெருமை சேர்ப்போம்.
2) கடவுளின் ஆசியைப் பெற அவரது கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வோம்
3) வாழ்வு தரும் வார்த்தையை அன்றாடம் வாசிக்க மறவாதிருப்போம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.