Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, July 17, 2023

ஜூலை 18 : முதல் வாசகம்‘நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்’ என்று கூறி, அவள் அவனுக்கு ‘மோசே’ என்று பெயரிட்டாள்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 2: 1-15

ஜூலை 18 :  முதல் வாசகம்

‘நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்’ என்று கூறி, அவள் அவனுக்கு ‘மோசே’ என்று பெயரிட்டாள்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 2: 1-15
அந்நாள்களில்

லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப் பெண்ணொருத்தியை மணம் செய்துகொண்டார். அவள் கருவுற்று ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தாள்; அது அழகாயிருந்தது என்று கண்டாள்; மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள். இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப் புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்; குழந்தையை அதனுள் வைத்து நைல் நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டு வைத்தாள். அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்து கொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.

அப்போது பார்வோனின் மகள் நைல் நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக் கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்; அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்; அது அழுதுகொண்டிருந்தது. அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். “இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று” என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோன் மகளை நோக்கி, “உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டாள். பார்வோனின் மகள் அவளை நோக்கி, “சரி. சென்று வா” என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். பார்வோனின் மகள் அவளை நோக்கி, “இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்"என்றாள். எனவே குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண். குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக் கொண்டாள். ‘நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்’ என்று கூறி அவள் அவனுக்கு ‘மோசே’ என்று பெயரிட்டாள்.

அக்காலத்தில் மோசே வளர்ந்துவிட்ட போது தம் இனத்தவரிடம் சென்றிருந்தார்; அவர்களுடைய பாரச் சுமைகளையும் பார்த்தார்; மேலும், தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதையும் கண்டார்; சுற்றுமுற்றும் பார்த்து, யாருமே இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார்.

அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கு இடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்; குற்றவாளியை நோக்கி, “உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?” என்று சொன்னான். இதனால் மோசே அச்சமுற்றார்; “நடந்தது தெரிந்துவிட்டது உறுதியே” என்று சொல்லிக் கொண்டார்!

இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான். எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment